இலங்கையில் அரச மருத்துவமனைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!


இலங்கையில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது என்பது சுகாதார அமைச்சும் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவு, மாதாந்த சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், கதிரியல் பிரிவு, உள் நோயாளர் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என அனைத்து பிரிவுகளும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு தரப்படுத்தப்பட்ட ஆய்வக சேவையை வழங்குவதற்காக, கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் திசு அறிவியல் பிரிவு, இலங்கை அங்கீகார வாரியத்தால் (SLAB) ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம், அரச மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்கள் தரப்படுத்தல் செய்யப்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.

சகல பொது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான சேவையை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும் எனவும், கடமையில் உள்ள 1.5 இலட்சம் சுகாதார ஊழியர்களின் தகவல்களை நிர்வகிக்க தொழிநுட்பத்தை பயன்படுத்துவதை முன்னிலைப்படுத்தி, அதனை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சுகாதார பதிவுகளை ஒன்றிணைப்பதுடன், மருந்து விநியோக வலையமைப்பை எதிர்வரும் காலங்களில் தொழிநுட்பத்துடன் நெறிப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.