நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு- வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12.08.2025) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும் வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்துடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்,  மணிக்கு 30–40 கி.மீ. வேகத்தில் மிதமானது முதல் பலத்த காற்று அவ்வப்போது வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கும்,  துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.