யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அரசாங்க அதிபர் அறிவிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்குமாறும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
காங்கேசன்துறையிலுள்ள எரிபொருள் களஞ்சியம் வழமைபோல ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதால், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை திங்கட்கிழமை முதல் வழமைபோல எரிபொருள் விநியோகிக்கப்படும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்படி, நாட்டுக்குத் தேவையான ஒரு மாத காலத்திற்கான எரிபொருள் தற்போது கையிருப்பில் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வதந்திகளை நம்பி நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
