மட்டக்களப்பில் சுவீடன் தயாரிப்பு ரொக்கெட் லோஞ்சர்கள் கண்டுபிடிப்பு

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை பகுதியில், நிலத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று ரொக்கெட் லோஞ்சர்கள் நேற்று (06) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அரந்தலாவைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையினரும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து குடும்பிமலை பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் போது, நிலத்தை தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ரொக்கெட் லோஞ்சர் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.