எதிர்வரும் ஜனவரி முதல் பாடசாலை நேரத்தில் மாற்றம் நிச்சயம் ; கல்வி அமைச்சு திட்டவட்டம்

இலங்கையில் எதிர்வரும் 2026 ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கும் தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  

இத்தீர்மானத்திற்கு ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதும், கல்வி அமைச்சு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதைத் தெரிவித்துள்ளது. 

தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும், கல்வி தொடர்பான சீர்திருத்தங்களை வடிவமைக்கும் பொறுப்பு தேசிய கல்வி நிறுவனத்துக்கே உண்டு என்றும், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.  

அவர் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய கருத்தில், தேசிய கல்வி நிறுவகத்துக்கு இத்துறையில் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளது என்றும், கல்வி அமைச்சின் பங்கு அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமேயானது என்றும் அவர்  கூறினார்.

தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாடநேரத்தை ஒரு மணிநேரமாக நீட்டிக்க முன்மொழிந்திருந்தது. ஆனால் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, அந்த நேரம் 50 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டது.  

இதன் விளைவாகவே, முழுமையான பாடத் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்க பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  

இந்த கல்விச் சீர்திருத்தங்கள், தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் முக்கியக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த இயலாது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களுக்குத் தங்களது கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளதாயினும், திட்டமிட்ட நடவடிக்கைகளை மாற்ற முடியாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.  

இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவிலான செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும், எனவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.  

தற்போது பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் பாடசாலை நேரம், புதிய சீர்திருத்தத்தின் அடிப்படையில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படவுள்ளது. (30 நிமிடங்கள் அதிகரிப்பு)

புதிய பாடசாலை நேர அட்டவணையை எதிர்த்து, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.  

அவர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, அரசாங்கம் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் இந்த புதிய கால அட்டவணையை திருத்தத் தவறினால், புதிய பாடசாலைப் பருவம் ஆரம்பிக்கும் நாளில் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.  

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தேசிய கல்வி நிறுவகத்தில் தகுதியற்ற சில தனிநபர்கள் தங்களது விருப்பப்படி சீர்திருத்தங்களை உருவாக்கி செயல்படுத்துகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.

2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள இந்த கல்வி சீர்திருத்தங்கள், ஒவ்வொரு பாடத்துக்கும் 50 நிமிடங்கள் என்ற நீண்ட நேரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.  

மேலும், கொவிட்-19 போன்ற முந்தைய தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்வதையும் இந்த சீர்திருத்தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.