கொழும்பின் சில முக்கிய நகர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கொழும்பு (Colombo) 01 முதல் 15 வரை உள்ள பகுதிகளுடன், சில முக்கிய நகரங்களிலும் 10 மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 10.00 மணி முதல் அன்றைய தினம் இரவு 8.00 மணி வரை, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை வழங்கும் முக்கிய நீர் பம்பிற்கு வழங்கப்படும் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு 01 முதல் 15 வரை உள்ள பகுதிகள் மற்றும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்படவுள்ளது.