நாட்டில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல்வேறு நேரங்களில் மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  

இன்று (24.10.2024) வெளியிட்ட அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ.-ஐ கடக்கும் அளவில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் ஆகிய இடங்களில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக அதிகரிக்கக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.