மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
கடந்த செப்டம்பரில், மின்சார கட்டணத்தை 6.8 சதவீதம் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்திருந்தது.
இந்த முன்மொழிவை பரிசீலிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின்படி, அதற்கான இறுதியான முடிவு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அந்த முடிவு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை செயல்முறை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்கு மாகாண பொது ஆலோசனையின் இறுதி அமர்வுக்குப் பிறகு, மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மின்சாரச் சட்டம் மற்றும் மின்சார கட்டண சூத்திரத்தின்படி, கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும்.
2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், இலங்கை மின்சார சபைக்கு ரூ.1,769 மில்லியன் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நட்டத்தை ஈடுகட்டும் நோக்கில், மின்சார சபை 6.8 சதவீத மின்சார கட்டண உயர்வை முன்மொழிந்துள்ளது.