இலங்கையில் கடும்மழை பெய்வதற்கான வாய்ப்பு!
அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்து மற்றும் தென் அரைக் கோளத்திலிருந்து வீசும் காற்றுகள் ஒன்றாகச் சேரும் பகுதி) மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலைகள், தற்போதைய வானிலையை தீர்மானிக்கக் காரணமாகின்றன.
இந்த காரணங்களால், இன்றிலிருந்து (15ஆம் திகதி) ஆரம்பித்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த மழைவீழ்ச்சி ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான அளவில் பலத்த மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் சாத்தியமும், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் உள்ளதால், அவற்றை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.