முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து - தமிழ் இளைஞர்கள் பலி

அனுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியில் தலாவ் - மிரிகம சந்திக்கு அருகில் இன்று அதிகாலை நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. செம்மலை, வள்ளிபுனம், புதிய குடியிருப்பு, வேணா பகுதிகளை சேர்ந்த ஆடைத்தொழில்சாலை ஊழியர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம் நோக்கி செல்லும் லொறியும் குருணாகல் நோக்கி செல்லும் வேனும் இன்று அதிகாலை தலாவ்-மிரிகம சந்திக்கு அருகே உள்ள மொரகொட பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.  

இந்த விபத்தில் காயமடைந்த வேனின் ஓட்டுநர் மற்றும் லொறியின் ஓட்டுநர் உட்பட 6 பேர் சிகிச்சைக்காக தலாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேனில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வேனில் இருந்த மற்ற மூன்று பேர் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவர்களில் ஒருவரும் உயிரிழந்தார்.

ஏனைய இருவரின் நிலைமைகள் மோசமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வேன் ஜாஎலவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்தது என போலீசார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் அடங்குவதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  

விபத்து, வேன் ஓட்டுநர் உறங்கிய நிலையில் இருந்ததாலேயே ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலாவ் போலீசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.