வான் பள்ளத்தாக்கினுள் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயம்

மாத்தறையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வானில் இருந்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (10) அதிகாலை 5.00 மணியளவில் ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள நானுஓயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது காயமடைந்தவர்களை அருகிலுள்ள மக்கள் விரைந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  

முதல் கட்ட விசாரணைகளில், வான் சாரதி நித்திரைமடைந்ததாலேயே விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளதாகவும், வானுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.