நாடு முழுவதும் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  

இன்று (21) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வொன்றிற்கு பதிலளித்த அவர், தேசிய பாடசாலைகளில் மட்டும் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன என தெரிவித்தார்.  

அதேவேளை, மாகாணங்கள்வாரியாக பதிவாகியுள்ள வெற்றிடங்கள் வருமாறு:  

- மேற்கு மாகாணம் – 4,630  

- தென் மாகாணம் – 2,513  

- மத்திய மாகாணம் – 6,318  

- வடமேற்கு மாகாணம் – 2,990  

- ஊவா மாகாணம் – 2,780  

- வடமத்திய மாகாணம் – 1,568  

- கிழக்கு மாகாணம் – 6,613  

- சபரகமுவ மாகாணம் – 3,994  

- வடக்கு மாகாணம் – 3,271  

இவ்வாறு மொத்தமாக 36,178 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணியிடங்களை நிரப்பும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள் மற்றும் 13 வருட தொடர் கல்வித் திட்டத்திற்கான ஆசிரியர் ஆட்சேர்ப்புகள், அதேபோல் க.பொ.த. உயர் தரத்தில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலத்தில் உள்ள வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புகளும் 2024 ஜூலை 28 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சேவையின் தரம் 3 (பி) 1 வகைக்கு உட்பட்ட 353 பட்டதாரிகளை அடுத்த இரு மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர் சேவையில் தற்போதைய வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், பிரதமரின் செயலாளரின் தலைமையிலான ஆட்சேர்ப்பு மறு ஆய்வுக் குழுவிடம் தேவையான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.